எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கொழும்பில் போட்டியிடுகின்றமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அந்த வகையில் கொழும்பு மாநகரசபையின் கீழ் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளன. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலையை ஏற்ப்படுத்தியுள்ளது.
இங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விஷயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் பதில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ். சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.