ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி

0
6

லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும் இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் அவமானம் என்று பொது மன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சட்ட மன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறினார்.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பிளாக்மேன் வலியுறுத்தினார். மேலும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான பொருத்தமான அமைச்சரவை அறிக்கைகளை உறுதி செய்யுமாறு அவைத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

நேற்று (புதன்கிழமை) இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த நாட்டில் இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றி முடிந்ததும் ​​ஒரு பொது இடத்தில் இருந்து வெளியேறும்போது தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

காலிஸ்தானி குண்டர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இது ஜெனீவா மாநாட்டிற்கு எதிரானது மேலும் அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் தவறிவிட்டதாகத் தெரிகிறது.

இப்போது ​​இது ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம் இது இந்தியாவில் உள்ள நமது நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஒரு அவமானம். மேலும் இது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இந்த நாட்டிற்கு வெளியூர் இராஜதந்திரிகள் வரும்போது ​​அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யப் போவது குறித்து உள்துறைச் செயலாளரோ அல்லது பொருத்தமான அமைச்சரோ இந்த அவையில் ஒரு அறிக்கை வெளியிடுவதைத் தலைவர் உறுதி செய்வாரா? என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

ஜெய்சங்கருக்கு எதிரான சம்பவத்திற்கு தொழிலாளர் கட்சித் தலைவர் லூசி பவல் மன்னிப்பு கேட்டார். லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் தாக்கப்பட்டார். மார்ச் 6 (புதன்கிழமை) மாலை மத்திய லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸுக்கு வெளியே இந்த சம்பவம் நடந்தது.

ஆன்லைனில் பரவி வரும் ஒரு காணொளியில் காலிஸ்தானிய குண்டர்கள் ஜெய்சங்கர் பயணித்த வாகனத்தை நோக்கி ஓடி வருவதும் லண்டன் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியைக் கிழிப்பதும் காட்டப்படுகிறது.

ஜெய்சங்கர் கலந்துரையாடலில் பங்கேற்ற இடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்கள் கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

வர்த்தகம், சுகாதாரம், கல்வி, மக்களிடையேயான உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய இந்தியா – இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.