இலங்கையில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்ச்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (7) நடைபெற்றது.
வினைத்திறனானதும் பாதுகாப்பானதுமான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கலை முன்னெடுக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
![](https://tamilnews.com/wp-content/uploads/2025/02/image-86.png)
தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரச சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.
மேலும் இதனூடாக ஜனாதிபதி நிதியச் சேவைகளை பிரதேச செயலகங்களுக்கு விரிவுபடுத்துதல் மற்றும் மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வசதிகளை அறிமுகப்படுத்துதல், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இராஜதந்திர பணிகள் மூலம் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெறுவதை சாத்தியமாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.