ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முடக்க ரணில் சதி; குற்றம் சுமத்தும் அனுர!

0
34

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை அனுர அரசிற்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை நசுக்க ரணில் விக்கிரமசிங்க சில குழுக்களை அமைத்துள்ளார் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டு அறிக்கைகளும் சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சு செயலாளர், கொழும்பு பேராயரின் செயலாளர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் தமக்கு அறிவித்ததாகத் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவை இரகசிய அறிக்கைகள் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அந்தக் குழுக்கள் விசாரணைக் குழுக்கள் அல்ல என்று கூறிய ஜனாதிபதி, விசாரணைகளை நசுக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில குழுக்களை அமைத்தார் என்றும் கூறினார்.

”இந்த இரண்டு குழுக்களும் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்டவை. இவை விசாரணைக் குழுக்கள் அல்ல. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல்-4 காணொளியின் அறிக்கையை ஆராய ஒரு குழுவும், பாதுகாப்புப் படையினருக்கு தொடர்பு உள்ளதா என ஆராய இரண்டாவது குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை நசுக்க ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான சில குழுக்களை அமைத்தார்” எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.