சின்வாரின் மரணம் – உலகிற்கே ஒரு நல்ல நாள்: பெரும் மகிழ்ச்சியில் பைடன்

0
23

ஹமாஸ் தலைவரின் மரணமானது, இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் மற்றும் உலகிற்கும் ஒரு நல்ல நாள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.

யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) கொலை உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து, பைடன் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பணயக்கைதிகளை அவர்களின் குடும்பங்களுக்கு கொண்டு வருவதற்கான வழி தொடர்பில் கலந்துரையாடவும், அப்பாவி மக்களுக்கு மிகவும் பேரழிவை ஏற்படுத்திய இந்த போரை ஒருமுறை முடிவுக்கு கொண்டுவரவும் பிரதமர் நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரேலிய தலைவர்களை தான் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் பைடன் கூறியுள்ளார்.

மேலும் சின்வாரின் மரணத்தைத் தொடர்ந்து, காசாவுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த அறிக்கையில் இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் அரசியல் தீர்வுகளுக்கான இலக்குகளை அடைய யாஹ்யா சின்வார் ஒரு தீர்க்க முடியாத தடையாக இருந்ததாகவும் ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் ஹமாஸ் என்ற குழுவின் தலைவரான சின்வார் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், பலஸ்தீனியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இஸ்ரேலில் ஒக்டோபர் 7 ஆம் திகதி படுகொலைகள், கற்பழிப்பு மற்றும் கடத்தல்களுக்கு மூளையாக சின்வார் இருந்ததாகவும் அவரது உத்தரவின் பேரில்தான் ஹமாஸ் அமைப்பினர் வேண்டுமென்றே மற்றும் சொல்ல முடியாத காட்டு மிராண்டித்தனத்துடன் இஸ்ரேலை ஆக்கிரமித்தனர் என்றும் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.