ஐந்தாம் தர மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர்: ஏறாவூரில் சம்பவம்

0
154

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்வி கற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் 3 சிறுமிகள் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்நிலையில் குறித்த மாணவர்கள் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்.

இதன்போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டிவந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போகமுடியாது என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் சிறுமியிடம் அதற்கான காரணத்தை கேட்டபோது சிறுமி அதிபரின் இந்த தகாத செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவத் தினமான நேற்று இரவு பெற்றோர் 119 ஆம் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.