ரணிலிடம் நியாயம் கேட்பதிலிருந்து தடுக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்: ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரால் மறுப்பு

0
115

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியை சந்திப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டு மிக நீண்ட காலமாகியும் நீதி கிடைக்காத ஏராளமான தமது சக ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தைக் கோரும் கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் தமிழ் ஊடகவியலாளர்கள் கையளிக்கவிருந்தனர். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரால் மறுக்கப்பட்டது.

எனினும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக கடமையாற்றிய மனுஷ நாணயக்காரவுக்கு விசுவாசமான தென்னிலங்கை சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு இடம்பெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு மனுஷ நாணயக்காரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய வழிவகுத்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்ததன் காரணமாக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என நேற்று (9) உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி கொழும்பில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ்ஜுக்கு, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான ஒரு சந்திப்பிற்கு அழைத்திருந்தனர்.

எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பிற்கு பல தமிழ் ஊடகவியலாளர்களும் ஊடக அமைப்புகளும் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

மேலும், தொடர்ச்சியாக வந்த அரசுகள் ஊடகச் சுதந்திரத்தை மறுத்து, குறிப்பாக தங்களது சகாக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதியை மறுத்தது மாத்திரமன்றி தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி பணியவைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டி இந்த கூட்டத்தை புறக்கணித்திருந்தனர்.

ஜனாதிபதி இரண்டு முறை வடக்கிற்கு பயணித்த போதும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும் , தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய, வடக்கு, கிழக்கில் இருந்து பல ஊடகவியலாளர்கள் கொழும்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது சக ஊடகவியலாளர்களுக்கு நியாயம் மற்றும் நீதி கோரி உறுதியான நடவடிக்கை தேவை எனக் கோரும் கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க வடக்கின் தமிழ் ஊடகவியலாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், அப்படியான ஒரு மனுவை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியாது என, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கூறி தடுத்துள்ளனர்.

ஜனாதிபதியிடம் கடிதம் கையளிப்பதை தடுத்தது மாத்திரமல்லாமல், வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளர்கள் அந்த கூட்டத்தில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, பல சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தமிழ் ஊடகவிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிங்கள ஊடகவியலாளர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அந்த கூட்ட அரங்கில் ஜனாதிபதியிடம் கையளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், தமிழ் ஊடகவியலாளர்கள் நுழைவாயில் அருகே தடுக்கப்பட்டனர். தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பறித்துக் கொண்டமையால் அங்கு ஒரு முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.

வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க ஒரு விசேட பொறுப்புக்கூறல் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

”இலங்கையில் இரண்டு தசாப்தங்களாக அந்த ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கத் தவறிய நீதியை நிறைவேற்ற வேண்டுமெனின், சர்வதேச கண்காணிப்புடனான நீதிமன்ற அதிகாரங்களை உள்ளடக்கிய ஒரு விசேட நீதிச் சபையை நிறுவுவது பொருத்தமானது என நாங்கள் நம்புகிறோம்.” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதுகாப்பு என்ற போர்வையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டது ‘அப்பட்டமான புறக்கணிப்பு’ என அவர்கள் தெரிவிக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை மாத்திரமே அவர்கள் கோரியிருந்தனர்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வட மாகாணத்திற்கு விஜயம் செய்த போது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பிற்கு அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தகவல்களும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் மூலம் அறிக்கையாக அளிக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு அவமானப்-டுத்தப்படுவதாக தமிழ் ஊடகவியாளர்கள் கூறுகின்றனர்.

வடக்கில் நடந்த புறக்கணிப்புகளை அடுத்து கொழும்பிற்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கையளித்த தங்களின் கோரிக்கைகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் அவர் பதிலளிக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.