தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்: ஜீவன் தொண்டமான்

0
77

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அனைவரும் போராட்டங்களை கைவிட்டு நாளை வெள்ளிக்கிழமை (26) முதல் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரையும் தொழிலுக்கு செல்லுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட கம்பனி ஒன்றின் கீழ் இயங்கும் நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் கடந்த மே மாதம் தேயிலை காணியில் கோப்பி பயிரிடப்பட்டதை எதிர்த்து தோட்ட முகாமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று தலைவர்களையும் தோட்ட நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது.

இந்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து உடனடியாக நான் களத்திற்கு சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் குறிப்பிட்ட தோட்ட முகாமையாளரினால் எனக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் சந்தேக நபர்களை நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.

மேலும், இச்சம்பவத்தை கேள்வியுற்று தொழிலாளர்கள் குறித்த பெருந்தோட்டக் கம்பனிக்கு எதிராக தொடர்ச்சியாக அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருகின்றீர்கள்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அனைவரும் போராட்டங்களை கைவிட்டு நாளை முதல் தொழிலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவரை காலமும் போராட்டங்களை மேற்கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, உடரதலை தோட்டத்தினை நிர்வகிக்கும் பெருந்தோட்ட கம்பனியின் செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.