பலத்த பாதுகாப்புடன் டாக்டர் அர்ச்சுனா வெளியேறினார்: பேச்சுவார்த்தை நடத்த கொழும்புக்கு வருமாறு அழைப்பு

0
102

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட பேச்சுவார்த்தை ஒன்றுக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியில் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் விடுதியில் மின்சாரம், குடிநீர் துண்டிப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தங்கியிருக்கும் வைத்தியர் விடுதியில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வைத்தியர் அர்ச்சுனா தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வைத்தியசாலையில் நடந்த ஊழல் மோசடிகளை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியுள்ளதுடன், அவரை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவரை வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை போராட்டகாரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, தான் தங்கியிருக்கும் வைத்தியர் விடுதியில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.