விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு தகடு; அதிர்ச்சியில் பயணி!

0
161

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு தகடு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

பெங்களூருவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி செல்லும் ஏர் இந்தியாவின் AI 175 என்ற விமானத்தில் மாதுரஸ் பால் என்ற பயணி பயணித்துள்ளார். பயணத்தின் இடையே பயணிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு இருப்பதை பயணி கண்டறிந்து உள்ளார். இது குறித்து மதுரஸ் பால் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

ஏர் இந்தியா விமான பயணத்தின் போது வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு இருப்பதை கண்டறிந்தேன். உணவு மென்று சாப்பிடுவதற்கு முன்னதாக அதை கண்டறிந்தேன். அதனால் எந்த வித அசம்பாவிதமும் நிகழவில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்து உள்ள ஏர் இந்தியா நிறுவனம்,

உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு பயணி கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும், உணவு சப்ளை செய்யும் நிறுவனம் இயந்திர கத்திகளை கொண்டு காய்கறிகளை வெட்டும் போது அதில் ஒரு பகுதி உடைந்து விழுந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவுக்கு உணவு சப்ளை செய்யும் கேட்டரிங் நிறுவனத்திற்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து இது போன்ற சம்பவம் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.