காணிகள் அளவீடு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்

0
112

யாழ். மாவட்டத்தில் படையினரின் தேவைகளுக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடுகளை நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளார். நில அளவைத் திணைக்களத்திடம் அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் இப்பணிப்புரையை விடுத்ததுடன், இது குறித்த தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

இத்தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் காணி சுவீகரிப்பு தொடர்பிலும், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

யாழ், மாவட்டத்தில் படையினருக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்க தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய படையினருக்கு வழங்கும் நோக்கில், சுழிபுரத்தில் மக்களின் காணிகளை அளவிடுவதற்கு திணைக்களம் தயாரானது.காணி உரிமையாளர்கள், பொது மக்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய தால், காணி அளவீடு செய்ய வந்திருந்த நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருக்கின்றனர். இவ்வாறு பல இடங்களிலும் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும், பொது மக்களின் காணிகளை படையினருக்கு வழங்க முடியாது. அத்தோடு படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் காணிகளை அளவீடு செய்வதையும் நிறுத்த வேண்டும். இதுகுறித்த தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.