இழுபறியில் இருந்த மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட்ட அவர்கள், 2019ஆம் ஆண்டு நியமனத்திற்கான சகல தகுதியினையும் பூர்த்தி செய்திருந்தனர்.
எனினும், கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி, அவர்களுக்கான நியமனம் வழங்கப்படாதிருந்தது.
10,000 கொடுப்பனவே ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் தொடர்பில், எமது செய்தி சேவை தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, அவர்களுடைய நியமனம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது, 138 ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் பதிலளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இந்தவிடயம் தொடர்பில், எமது செய்தி சேவை மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகேவிடம் வினவிய போது, அவரும் அதனை உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
