வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் கடந்த முறை பிரேரணைகளே: நாமல்

0
203

இவ்வருட வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் கடந்த முறை வரவு செலவு திட்டத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக இன்று பிற்பகல் தனது வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அதைப் பார்க்கும்போது பல விடயங்களை கடந்த வரவு செலவு திட்டத்திலும் அவர் முன்வைத்துள்ளார். அவை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிகிறது. அதனால் மீண்டும் முன்வைத்துள்ளார்.

ஒரே விடயம் இரண்டு முறை கூறப்படுகிறதெனின், அந்த விடயம் அடிமட்ட அளவில் நடைமுறையில் நிறைவேற்றப்பட்டதா? இல்லையா? என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது.

எனவே இவ்வருட வரவுசெலவுத் திட்டமும் அதுபோன்ற பேச்சுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டமாக இருக்குமா என்பது தொடர்பில் காத்திருக்கிறோம்.

எதிர்வரும் காலங்களில் இதை ஆய்வு செய்து, பாராளுமன்ற விவாதத்தில் எங்களது யோசனைகளை முன்வைப்போம். ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா என்பதை பார்ப்போம்.

மொட்டுக் கட்சியின் ஆட்சி காலத்தில் நிதியமைச்சராக இருந்து அவர் வந்துள்ளார். அப்படியானால் வரவு செலவு திட்டங்களில் எங்கள் கொள்கைகள் இருக்க வேண்டும். வேடிக்கை கதைகள் பயனற்றவை. அவை நடைமுறையில் செயல்படுத்தப்படாவிட்டால்.” என தெரிவித்துள்ளார்.