இலங்கையில் 5G தொழில்நுட்பம்; புவிசார் அரசியல் நிலைமைகளை கவனமாகக் கையாள்வதாக அரசாங்கம் அறிவிப்பு

0
227

சீனாவின் Huawei நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உத்தேச 5G தொழில்நுட்ப முறை குறித்து அவதானமாகவே இலங்கை செயல்படும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

புவிசார் அரசியலில் Huawei நிறுவனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் உத்தேச 5G தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தும் விடயத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக 5G தொழில்நுட்பத்தைப் பற்றி கேள்விப்பட்டு வருகிறோம். இந்த தொழில்நுட்பம் குறித்த பேச்சுகள் 2018 முதல் நடந்து வருகிறது. 5G தொழில்நுட்பம் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2025 முதல் இலங்கையில் 5ஜி

5 ஜி (5G) தொழில்நுட்பம் 5ஆவது தலைமுறை தொலைபேசியாகும். இது நெட்வொர்க் வேகத்தை 4 ஜி முதல் 100 மடங்கு வரை அதிகரிக்க செய்யும் தொழில்நுட்பம் (Technology) ஆகும். எந்தவொரு திரைப்படத்தையும் ஒரு சில நொடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும். 5G என்பது சர்வதேச அரசியலில் ஏற்கனவே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டளவில் 6 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 75% பேர் ஒவ்வொரு நாளும் தரவுகளுடன் தொடர்புகொள்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு 18 வினாடிகளுக்கு ஒருமுறை குறைந்தபட்சம் ஒரு தரவுடன் தொடர்பு கொண்டிருப்பார் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை சரியான முறையில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

எச்சரிக்கையுடன் செயல்படும் இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அண்மைய சீன விஜயத்தில், Huawei நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

Huawei நிறுவனம் இலங்கை பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்கும் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

“புவிசார் அரசியல் போட்டியின் காரணமாக எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்துடனும் இணைந்து 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவதானம் மிக்க விடயமாக உள்ளதால் அதுகுறித்து அரசாங்கம் கரிசனையுடன் செயல்படுகிறது என சுட்டிக்காட்டினார்.

இலங்கை புவிசார் அரசியல் பதற்றத்தில் அல்லது எந்தவொரு போட்டியிலும் சிக்காமல் இது தொடர்பில் முடிவெடுக்கும். எச்சரிக்கையான அணுகுமுறையையே இலங்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.