யாழ்ப்பாணம் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா (வயது 23) என்கிற இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவர் சந்தேகத்தின் பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் திங்கட்கிழமை (16) காலை குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் மீட்கப்பட்டபோது வீட்டில் கணவன் இல்லாத காரணத்தால் கணவரே கொலை செய்திருக்க வேண்டும் என்கிற பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.

தப்பியோடிய கணவன்
அதனையடுத்து, கணவரை பொலிஸார் தேடிய நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில் முச்சக்கர வண்டியில் சந்தேக நபர் தப்பிக்க முற்பட்டவேளை கைது செய்யப்பட்டார்.

மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தபோது, சந்தேக நபர், தான் மனைவியை தாக்கிய பின்னர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், மனைவி உயிரிழந்தது தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்ததாக பொலிஸார் கூறுகின்றனர். இதனையடுத்து கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.