இந்திய பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் (சரிகமப) நிகழ்ச்சியில் பங்கேற்று மலையக மண்ணை அடையாளப்படுத்தி பெருமைப்படுத்தியுள்ளார் அசானி.
அசானியின் பங்கேற்பினைத் தொடர்ந்து பலர் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தக்குமார் அவர்களும் அசானிக்கு கரம் கொடுத்து உதவ முன்வந்துள்ளார்.
அந்த வகையில் இலங்கையிலிருந்து சென்றிருக்கும் மலையகச் சிறுமி அசானிக்கு தங்களது சொந்த செலவில் வீடொன்றை அமைத்து தரப்போவதாக தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
“இலங்கையிலிருந்து மலையகத்தை சேர்ந்த மாணவியொருவர் பாட்டு பாடுவதற்காக ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ளார்.
அவருக்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எனது மகன் சார்பாகவும் கனடாவில் வசிக்கும் எனது குடும்ப உறவினர்கள் சார்பாகவும் சுமார் 15 இலட்ச ரூபாய் செலவில் ஒரு வீட்டை நிர்மாணித்து கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

ஆகவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே முதற்கட்டமாக எனது இணைப்பாளரை அசானியின் ஊருக்கு அனுப்பி இருக்கின்றேன்.
இதனடிப்படையில் அவருக்கான வீட்டை எவ்வாறு எங்கே கட்டி கொடுக்க முடியும் என ஆராய்ந்து எனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.