குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர்!

0
30

கண்டியில் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் போட்டியில் இருந்தும் விலகிக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றையதினம் (20-10-2024) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (21.10.2024) கருத்து வெளியிட்ட அவர்,

“கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தமக்கு சொந்தமானது என நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தாம் ஏமாற்றவோ அல்லது திருடவோ அரசியலில் ஈடுபடவில்லை. எனவே இந்த விவகாரங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிந்த பிறகு விவாதிப்பது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் மற்றும் ஜீப் வாகனம் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

கண்டி அனிவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் அபேகுணவர்தனவின் மருமகனின் வசிப்பிடத்திலிருந்து வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

அவர் துறைமுக அதிகாரசபையில் முக்கிய பொறுப்பை வகித்த நிலையில் அங்கிருந்தே இந்த வாகனங்கள் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அந்த வாகனங்கள் தமது மருமகனுடையது என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தன்னை ஏன் குறிவைக்க வேண்டும்? எனவே வேறு ஒருவரின் குற்றங்கள் அல்லது மோசடிகளுக்கு தாம் பொறுப்பல்ல” என கூறியுள்ளார்.