ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை அறிக்கைகளை ஏன் மறைக்க வேண்டும்?: அரசிடம் ரவிகுமுதேஷ் கேள்வி

0
33

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதாக கூறியே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தார். அதனால் இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகளை வெளியிடுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்குவதாகக் கூறியே கோட்டாய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர். தற்போதைய ஜனாதிபதியும் அந்த வாக்குறுதியை அளித்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடாது அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றமை வேடிக்கையானது.

தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பினரை பாதுகாக்கும் நோக்கில் இந்த அறிக்கை ரகசியமான முறையில் வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அரசாங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்க வேண்டும்.” என்றார்.