வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி!

0
14

நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையிலும், வாகனங்களின் தேவைக்கேற்பவும் அவற்றை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்குமாறு பெருமளவில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னர் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் உள்ளது. ஆனால் தற்போது அவசர வாகன கொள்வனவு இடம்பெறவில்லை.

அதேபோன்று சுங்கவரி சலுகை வழங்கி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுமில்லை. ஆனால் வாகன இறக்குமதி நடவடிக்கைகள் சரியான வழிமுறைகளின் கீழ் அந்நிய செலாவணி இருப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்படும்.

அந்தவகையில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையிலும், வாகனங்களின் தேவைக்கேற்பவும் அவற்றை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்