வானிலேயே 2.35 மணி நேரமாக 144 பயணிகளுடன் வட்டமிட்ட விமானம்! நடந்தது என்ன?

0
40

தமிழகத்தில் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று சுமார் 2 மணித்தியாலம் 35 நிமிடம் வானத்திலேயே வட்டமடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 144 பயணிகளுடன் இன்றையதினம் (11-10-2024) மாலை 5.40 மணியளவில் புறப்பட்டது.

வழக்கமாக விமானம் தரையில் இருந்து மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அந்த விமானத்தை மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக குறித்த விமானம் சுமார் 2 மணித்தியாலத்திற்கு மேலாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது. விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு பிறகு விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடைபெற்றது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தன. 

இதேவேளை,  சுமார் 2 மணித்தியாலத்திற்கு மேலாக வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், 8.15 மணியளவில் விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 6 குழந்தைகள் உள்பட 144 பயணிகளும் பத்திரமாக விமானத்திலிருந்து மீட்கப்பட்ட அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.