இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 18 பேர் மருத்துவமனையில்!

0
33

இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான. விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.