3 வயது சிறுவனை தாக்கி காணொளியை மனைவிக்கு அனுப்பி தந்தை: பொலிஸாரால் கைது

0
75

மூன்று வயது குழந்தையை மிக கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுருத்தகம – கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாதங்கள் வயதான ஆண் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்படுவதாக எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு நேற்று (24) இரவு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இவற்றை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையே மேற்படி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் 24 வயதுடைய மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேகநபரின் பாதுகாப்பின் கீழ் குறித்த சிறுவன் இருந்துள்ளார்.

குழந்தை கைகளை உயர்த்தி தரையில் மண்டியிட்டு சாப்பாடு கேட்ட போது குழந்தையை கடுமையான வார்த்தைகளால் திட்டி, குழந்தையின் கால் ஒன்றை துவிச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தின் கீழ் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தையை கொடூரமாக தாக்கும் காணொளிகளை வெளிநாட்டில் உள்ள தாய்க்கு சந்தேகநபர் அனுப்பி வைத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதை அவதானித்துள்ளதாகவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.