அத்துருகிரியவில் கிளப் வசந்த கொலை சம்பவம்; மேலும் இருவர் கைது!

0
53

கிளப் வசந்த உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 8ஆம் திகதி, அதுருகிரிய பொலிஸ் பிரிவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது, ​​நேற்று (23) மாலை அதுருகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசங்களில், குற்றச் செயலுக்கு உறுதுணையாக இருந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அதுருகிரிய பொலிஸாரிடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதில் ஒரு சந்தேநபர், கொரத்தோட்டை பிரதேசத்தில் இருந்து வெலிஹிந்த பிரதேசத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும் கார் சாரதியையும் வேன் ஒன்றில் ஏற்றிச் சென்று, வேனை புளத்சிங்கள பிரதேசத்திற்கு கொண்டு சென்று மறைந்தவர் எனவும்,

மற்றைய சந்தேகநபர் வெலிஹிந்த பிரதேசத்தில் இருந்து தெற்கு அதிவேக வீதியின் ஊடாக திக்வெல்ல பிரதேசம் வரை சந்தேகநபர்களை பேருந்தில் அழைத்துச் சென்று, குறித்த பேருந்தை செல்ல கதிர்காமம் பகுதியில் மறைத்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காலப்பகுதியில் சந்தேகநபர் வட்ஸ்எப் ஊடாக வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைப்பேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 36 வயதுடைய வெலிபன்ன மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் அதுருகிரிய பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.