ஒலிம்பிக் சுடரை ஏந்திய காலை இழந்த பெண் ஊடகவியலாளர்!

0
49

2024 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் முழுவதிலும் பல்வேறு துறைகளை சார்ந்த பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்கின்றனர்.

இந்நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட வேளை காலை இழந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரான்ஸ் தலைநகரில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றுள்ளார்.

ஒலிம்பிக் சுடரை ஏந்திய காலை இழந்த பெண் ஊடகவியலாளர் | Journalist Who Lost Leg Carrying Olympic Flame

ஊடகப்பணியின் போது கொல்லப்பட்ட காயமடைந்த பத்திரிகையாளர்கள் நினைவாக அவர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றுள்ளார். 2023ம் ஆண்டு ஒக்டோபர் 13ம் திகதி லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஏஎவ்பியின் கிறிஸ்டினா அசி. மோதல் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தவேளை இவர் காயமடைத நிலையில் அவரின் வலது கால் துண்டிக்கப்பட்டது.

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ரொய்ட்டரின் வீடியோ ஊடகவியலாளர் இசாம் அப்டெல்லா கொல்லப்பட்டார், அல்ஜசீராவின் ஊடகவியலாளர்கள்காயமடைந்தனர்.

நவம்பரில் ஊடகவியலாளர்கள் மீது தென் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில் அல்மயாடின் வலையமைப்பை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பரிசின் புறநகர் பகுதியான வின்செனெசில் அசி சக்கரநாற்காலியில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்ற நிலையில் இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த ஏஎவ்பியின் வீடியோ ஊடகவியலாளர் டைலன் கொலின்சும் அவருடன் இணைந்து கொண்டுள்ளார்.

தாக்குதலில் கொல்லப்பட்ட இசாமும் உயிருடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என கண்ணீரை அடக்கமுடியாமல் அசி தெரிவித்துள்ளார். அதேவேளை அல்ஜசீரா, ஏஎவ்பி, ரொய்ட்டர் உட்பட பல சர்வதேச ஊடக நிறுவனங்கள் இஸ்ரேல் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு இலக்கு வைப்பதாக தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் திட்டமிட்டே தாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள ரொய்ட்டரும் மனித உரிமை கண்காணிப்பகமும் இது யுத்த குற்றம் விசாரணைகள் அவசியம் என தெரிவித்துள்ளன.

மேலும் காசா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் இதுவரை 108 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.