சுகாதார அமைச்சரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்ல விடாது தடுத்த உயர் அதிகாரிகள் யார்?

0
52

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தான் செல்ல இருந்ததாகவும் ஆனால் அங்கு செல்ல வேண்டாம் என மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்ட முகநூல் பதிவில் மேற்கண்ட விடயத்தை ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

”சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என அறிந்ததும் நாடளுமன்றில் வைத்து அவரிடம் “சாவகச்சேரி மருத்துவமனையில் ஏதோ பிரச்சினை இருப்பதாக பேசப்படுகிறது.

உங்கள் விஜயத்தின்போது அங்கு சென்று பாருங்கள் என கூறியிருந்தேன் பிறகு அவர் அங்கு செல்லவில்லை என அறிந்ததும், அலைபேசியில் அழைத்து,

“ரமேஷ், யாழில் ஏன் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்லவில்லை? உங்கள் பயண திட்டத்தில் அது அமையப் பெறவில்லையா? அல்லது நிக‌ழ்ச்சி நிரல் இடையில் மாற்றபட்டதா? அங்கே சென்று பாருங்கள் என்று கூறி இருந்தேனே?” என்று கேட்டேன்.

இதற்கு பதிலளித்த ரமேஷ் பத்திரண “சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல இருந்தேன். சிலர் வேண்டாம் என்றார்கள். மருத்துவ துறையை சார்ந்த சிலரே இதனை கூறியிருந்தனர். ஆனால் அந்த மருத்துவமனைக்கு 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என அவர் பதிலளித்திருந்தார் என மனோ கணேசன் கூறியுள்ளார்.