மக்களுக்கு நான் உண்மையாக இருந்தது மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை; மனம் திறந்த மருத்துவர் அர்ச்சுனா

0
53

யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன முற்றுப்புள்ளி வைத்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று (19) இடம்பெற்றது.

இதன் போது இராமநாதன் அர்ச்சுனா இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்காக உண்மையாக செயற்பட்டதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன் எனவும் அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை எனவும் கவலை வெளியிட்டார்.

ஒரு வைத்தியருக்காக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை. தென்மராட்சி மக்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன் யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர்.

ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன். சுகாதார அமைச்சிற்கு வருமாறு நேற்றைய திகதியிட்டு இன்றைய தினம் எனக்கு கடிதம் கிடைத்துவிட்டது.

கொழும்பு சென்று நாளை அங்கு புதிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டு நான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என்றார்.