காதலனுடன் சென்ற தமிழ் இளம்பெண் மாயம்; கொலை செய்யப்பட்டாரா…. நடந்தது என்ன?

0
26

திருகோணமலை – சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம்பெண்ணே காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். விசாரணையை ஆரம்பித்துள்ள மூதூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபரை விசாரணை செய்ததன் அடிப்படையில் கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப்புறத்தில் பாழடைந்து கிடக்கும் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் நேற்று (03) புதன்கிழமை முதல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அந்த கிணறு நாளைய தினம் (5) வெள்ளிக்கிழமை காலை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த யுவதியும் மூதூர் கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் விஷ்ணுகாந்த் (வயது 25) என்ற இளைஞனும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன், கடந்த மே மாதம் யுவதி காதலனுடன் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் மே மாதம் 31ஆம் திகதி குரல் பதிவொன்றை குடும்பத்தாருக்கு அனுப்பியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் அன்றைய தினம் இரவு வீடியோ அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத்திருந்ததுடன் தான் வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்த பின்னர் அவருடன் தொடர்பில்லாமல் போயிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மகளிடம் தொடர்பு இல்லமாமல் போனதை அடுத்து காதலனின் இலக்கத்துக்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை முயற்சித்த போதும் அழைப்பை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது.

அதன் பின் ஜூன் மாதம் 13ஆம் திகதி அவர் அழைப்பெடுத்து தான் வேலையில் நிற்பதாகவும் வீட்டுக்குச் சென்ற கதைப்பதாக யுவதியின் தம்பியிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் ஜூலை மாதம் முதலாம் திகதி முறைப்பாடு செய்ததாகவும் யுவதியின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த யுவதி கொலை செய்து கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.