யாழில் அரச அதிகாரிகளை கடைக்குள் பூட்டி வைத்த மருந்தக உரிமையாளர் கைது!

0
27

யாழ். கலட்டி சந்திக்கு அருகில் இயங்கி வரும் சட்டவிரோத மருந்தகத்தினை சோதனை செய்யச் சென்ற பிராந்திய உணவு, மருந்துப் பரிசோதகர்கள் இரண்டு பேரை பூட்டி வைத்து சண்டித்தனம் செய்த மருந்தக உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கலட்டிப் பகுதியில் பெயர் இல்லாமல் மருந்தகம் ஒன்று இயங்கி வருவதை அறிந்த பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர்கள் (01-07-2024) மாலை அதனை சோதனை செய்வதற்காகச் சென்றுள்ளனர்.

மருந்தகம் தொடர்பான விபரங்களை கேட்டபோது அங்கு பணி புரிந்தவர்கள் சரியான பதிலை வழங்காததால் உரிமையாளரை அழைத்துள்ளனர்.

உரிமையாளரிடம் விசாரணை செய்த போது அவர் சரியான பதிலை வழங்காகததால் பதிவு செய்யப்படாமல் மருந்தகம் இயங்கி வந்ததை உறுதிசெய்த பரிசோதகர்கள் சான்றுப்பொருட்களை பெற்றுக்கொண்டு சட்ட நடவடிக்கைக்கு தயாராகியிருந்தனர்.

கடை உரிமையாளர் எந்த சான்றுப்பொருட்களும் வெளியே எடுத்துச்செல்லக்கூடாது எனத் தெரிவித்து இரு பரிசோதகர்களையும் கடைக்குள் வைத்துப் பூட்டியுள்ளார்.

பின்னர் கடையில் இருந்த மருந்துகளை மூட்டை மூட்டையாக கட்டி தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இணுவிலில் உள்ள தனது மற்றைய மருந்தகத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

சிறைப்பிடிக்கப்பட்ட பரிசோதகர்கள் மேலிடத்துக்கு தகவலை தெரிவித்துள்ளனர். உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

ஆனால் பொலிஸார் வருவதற்கு முன்னர் குறித்த உரிமையாளர் மருந்துகளை தனது மற்றைய கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பரிசோதகர்களை மீட்டனர்.

பின்னர் உரிமையாளரை கைது செய்ததுடன் அவர் தனது மற்றொரு மருந்தகத்திக்கு கொண்டு சென்ற மருந்துகளை மீண்டும் இந்த மருந்தகத்துக்கு எடுத்துவந்துள்ளனர்.

தற்போது மருந்தகம் பூட்டப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.