கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன; நாடாளுமன்றில் ரணில் தெரிவிப்பு

0
23

கடன் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் ஆனால் அவற்றில் சில உண்மை இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளும்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி இலங்கைக் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், அதில் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருதரப்புக் கடன் எனவும், 11.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பலதரப்புக் கடன் எனவும், 14.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தகக் கடனாகவும், 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இறையாண்மை பத்திரங்களாகவும் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.