பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் வெடித்த வன்முறை; அச்சத்தில் மக்கள்!

0
33

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

தீவிர இடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

 மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட மக்ரோனின் கட்சி

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை , தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்என்கட்சியின் மரைன்லெபென் தெரிவித்துள்ளார். அதோடு பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான் அனைத்து பிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்என் கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.