ஈரான் ஜனாதிபதித் தேர்தல்; அஹமதினஜாத் வேட்புமனு

0
105

ஈரானில் இந்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு கடும்போக்காளரான முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதினஜாத் நேற்று (02) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மே 19 ஆம் திகதி இடம்பெற்ற ஹெலி விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்ட நிலையில் புதிய ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

67 வயதான அஹமதினஜாத் 2005 தொடக்கம் 2013 வரை தொடர்ச்சியாக இரண்டு தவணைகள் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

அவரது பதவிக் காலத்தில் இஸ்ரேல் மற்றும் மேற்குலகத்துடன் முறுகல் அதிகரித்திருந்ததோடு ஈரானின் அணுசக்தி திட்டமும் வலுப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈரானின் 12 நீதிபதிகள் கொண்ட பாதுகாவலர் சபையின் அனுமதி வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.