அரச சாரதிகள் இடமாற்றம் குறித்து கொட்டும் மழைக்குள் போராட்டம்

0
79

வட மாகாண அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (03) முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று கூடிய அரச சாரதிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வட மாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது கடந்த வருடம் பிரதிப்பிரதம செயலாளரினால் (நிர்வாகம்) விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் ஆளுநரின் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த அரச சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.

போராட்ட ஏற்பாட்டினைத் தொடர்ந்து ஜீன் 1ஆம் திகதி தொடக்கம் இடைநிறுத்தப்பட்ட இடமாற்றமானது அமுல்படுத்தப்படுமென எழுத்து மூலமான உறுதி மொழியினை பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) வழங்கியிருந்தார்.

குறித்த திகதியில் இடமாற்றம் நடைமுறைக்கு வராதநிலையில் வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தொடர்ச்சியாக 7ஆம் திகதி வரை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.