2022 (2023) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன.
இந்த வருடம் 263,933 விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன் 84 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற 166,938 பேரில் 149,487 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மீதமுள்ள 17,451 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.
இந்த வருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய 96,995 விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்துப் பள்ளி மற்றும் தனியார் பரீட்சார்த்திகளும் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் அனைத்து பாடசாலை அதிபர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, பாடசாலை பரீட்சை முடிவு ஆவணங்களை பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட நகலைப் பெறலாம்.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளில் ஏதேனும் சந்தேகம் இருக்கம் பட்சத்தில் மீள் திருத்தம் செய்துகொள்வதற்கான திகதிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் 11.09.2023 இருந்து 16.09.2023 ஆகிய திகதிகளுக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.