சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறும், அனர்த்தம் தணியும் வரை நிவாரண சேவைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால், நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் (27) வரையில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ சேவை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பலத்த காற்று வீசியதால் ஏற்பட்ட விபத்துகளில் 07 பேரும் படகு கவிழ்ந்ததில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.
இதற்கமைய உயிரிழந்தவர்களுக்காக அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிலையத்தினால் 2,50,000 ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளதுடன், 25,000 ரூபா முன்பணமாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முன்தினம் (27) வரை 11,326 குடும்பங்களைச் சேர்ந்த 42,640 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, மக்களின் சுகாதார மற்றும் சுகாதார வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.