வெடுக்குநாறிமலை கைது விவகாரம்: ஆதாரங்களை கோரும் மனித உரிமை ஆணையம்

0
28

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த மாதம் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக நெடுங்கேணிப் பொலிஸாரிடமும் வனவள பணிமனை அதிகாரிகளிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

நேற்று புதன்கிழமை வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் ஆலய நிர்வாகத்தினரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

அன்றையதினம் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரால் கூறப்பட்ட பல விடயங்களைப் பொலிஸார் மறுத்தனர். சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது வனப்பகுதிக்குள் தீ மூட்டப்பட்டிருந்தது என்றும் பிளாஸ்ரிக் பொருள்கள், சமையல் கழிவுகள், ஆலயப் பூசைப் பொருள்கள் அங்கு கொட்டப்பட்டிருந்தன என்று வனவள பணிமனையினர் குறிப்பிட்டனர்.

தொல்பொருள் பணிமனையின் கடிதத்தின் அடிப்படையிலும், வனப் பகுதிக்குள் தீ மூட்டப்பட்டிருந்ததாலும் அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாங்கள் எவர் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்றும் வேட்டியை அகற்றி அரை நிர்வாணமாக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

நாளை வெள்ளிக்கிழமை, அங்கு நடைபெற்றன என்று கூறப்படும் விடயங்கள் தொடர்பான சான்றுகள் மற்றும் ஆதாரங்களை ஆலய நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.