X-Press Pearl கப்பல் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை: நிராகரித்த சிங்கப்பூர் நீதிமன்றம்

0
76

இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் (X-Press Pearl) நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் விடுத்த கோரிக்கையினை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் (SICC) நிராகரித்துள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ மற்றும் கப்பல் மூழ்கியதன் காரணமாக இலங்கை கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க பிரித்தானிய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதன் காரணமாக குறித்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் நீதிமன்றத்தில் கோரியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அவகாசம் அளித்துள்ளது. இதன்படி இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீக்கிரையானதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகளுக்கு எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த காப்பீட்டு முகவர்களுக்கு எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் கப்பல் நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையை 19.5 மில்லியன் ஸ்டெர்லிங் பவுணாக கட்டுப்படுத்தி பிரித்தானிய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ஆட்சேபனைகளை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.