வெடுக்குநாறிமலை விவகாரம்: மூன்றாவது நாளாகவும் தொடரும் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரத போராட்டம்

0
71

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா சட்டத்தரணிகள் சிலர் அவர்களை பார்வையிட்ட நிலையில், இன்றும் (14.03.2024) போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்றுமுன்தினம் (12.03.2024) உத்தரவு பிறப்பித்தது.

சட்டத்தரணிகள் விஜயம்
இதனையடுத்து அவர்கள் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமக்கான நீதி வழங்கக்கோரி அவர்களில் 5 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய குறித்த உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடித்து வருகின்றது.

கைது செய்யப்பட்ட எட்டுபேரில் ஆலய பூசாரியார் த.மதிமுகராசா, மற்றும் து.தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன், சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் வழமை போல உணவினை உட்கொள்வதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நேற்றயதினம் (13.03) தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகளான கொன்சியஸ் மற்றும் திலீப்காந் ஆகியோர் இன்றையதினம் (14.03) சிறைச்சாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டனர்.

இதன்போது அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றமையினை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.