மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்ச குடும்பத்தை ரணில் வாழ வைத்துள்ளார்: சஜித் தரப்பு சாடல்

0
80

ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார சாடியுள்ளார்.

வவுனியாவிற்கு நேற்று (13.03.2024) விஜயம் செய்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு மிகவும் மோசமாக சீரழிந்த நிலையில் உள்ளது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளையும், இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளையும் சாப்பிடும் வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் மரணிக்கும் நிலை
பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் மாணவர்கள் மரணிக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயத்தை மையமாக கொண்டு வாழ்கிறார்கள்.

நோயுற்ற நிலையில் வைத்தியசாலை செல்லும் போது அங்கு மருந்துகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் பலர் மரணிக்கும் நிலை உள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த ஒருவர் ஊழல் மோசடி செய்து சிறையில் உள்ளார்.

போசாக்கு இன்றி குழந்தைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றனர். இந்தநிலைக்கு தற்போதைய அரசாங்கமும் பதில் சொல்ல வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஏனையவர்களும் எமது குழந்தைகள் தொடர்பில் சிந்திக்காது தமது அரசியல் குறித்து சிந்திக்கிறார்கள்.