கானாவின் பாராளுமன்றத்திற்கு மின் விநியோகத்தை துண்டித்த மின்சார நிறுவனம்

0
85

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் நாடாளுமன்றத்திற்கான மின் விநியோகத்தை அந்நாட்டு மின்சார நிறுவனம் துண்டித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கானா நாடாளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ  நாட்டு மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும் என நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்தது.

இதையடுத்து, அங்கிருந்து உறுப்பினர்கள் அனைவரும் அக்கன் மொழியில் “மின்சார தடை” எனும் பொருள்பட “டம்சர், டம்சர்”  என கோஷமிடத் தொடங்கினர். சில நிமிடங்கள் கடந்ததும் உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாரம் கிடைத்தது.

ஆனால், நாடாளுமன்றத்தின் பிற பகுதிகளுக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் மின் தூக்கியில்  பயணித்த பல உறுப்பினர்கள் அதில் சிக்கிக்கொள்ள நேர்ந்தது.

நாடாளுமன்ற அலுவலகம் செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கியை வசூலிக்க பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டணத்தை செலுத்தாததால் மின் விநியோகத்தை துண்டித்ததாக எனும் அந்நாட்டு மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் வில்லியம் போடெங்  தெரிவித்துள்ளார்.

மின் தடை என்பது கட்டணம் செலுத்தாத அனைவருக்கும் தான். கட்டணம் செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்நாட்டின் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வாங்க கானா அரசால் முடியவில்லை.

நாளின் பிற்பகுதியில் கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்திய பிறகே  நாடாளுமன்றத்திற்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கானா அரசு மின்சார துறைக்கு 1.8 மில்லியன் டொலர் அளவிற்கு கட்டண பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.