தலையில் கல்லைப் போட்டு காதலியை கொலை செய்த திருமணமான காதலன்!

0
111

தன்னுடன் வாழ மறுத்த காதலியின் தலையில் கல்லைத் போட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவான காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

காதல் விவகாரம் 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த தென்கரை பகுதியை சேர்ந்தவர் சிவஜோதி(19). இவரும், பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்த காளீஸ்வரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு காளீஸ்வரன், தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், புனல்வாசலுக்கு சென்று விட்டார். இதனையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனை அறிந்த சிவஜோதி இதுகுறித்து காளீஸ்வரனிடம் செல்போனில் கேட்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு பேராவூரணி வந்த காளீஸ்வரன், குடிபோதையில் சிவஜோதி வீட்டுக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கொலை 

மேலும், தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறும் சிவஜோதியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு, திருமணமான உன்னுடன் வரமாட்டேன் என்று செவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த தகராறு குறித்து பேராவூரணி காவல் நிலையத்திற்கு சிவஜோதியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், காளீஸ்வரன் குடிபோதையில் இருந்த காரணத்தால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் கண்டித்துள்ளனர். பின்னர் அதிகாலை மீண்டும் சிவஜோதியின் வீட்டிற்கு வந்த காளீஸ்வரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், காளீஸ்வரன் முண்டுக்கல்லை எடுத்து சிவஜோதியின் தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே காளீஸ்வரன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த பேராவூரணி போலீசார் சிவஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய காளீஸ்வரனை வலைவீசி தேடி வருகிறார்கள்.