ஹைட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் சடலங்களாக மீட்பு: மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்!

0
101

தெற்கு ஹைட்டியில் உள்ள ஒரு தொலைதூர மலை நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்துள்ளார்.

இந்தக் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட ஒரு நாளுக்குப் பின்னர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தலைநகர் போர்ட் – ஓ – பிரின்ஸுக்கு தெற்கே சுமார் 30 மைல் (48 கிமீ) தொலைவில் உள்ள செகுயின் நகரில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

மரணத்திற்கு காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விஷம் கலந்தமையால் இந்த மரணங்கள் பதிவாகியிருக்கலாம் என உள்ளூர் சாட்சிகள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பொலிஸ் மற்றும் சுகாதார சேவைகள் அப்பகுதிக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணங்கள் கும்பலுடன் இணைக்கப்படவில்லை. என்றாலும் ஹைட்டிய குற்றவியல் குழுக்கள் பெருகிய முறையில் சக்தி வாய்ந்ததாக வளர்ந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி கடந்த ஆண்டு கும்பல் நடவடிக்கைகள் காரணமாக சுமார் 5,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.