எட்டே வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி: வியப்பில் ஆழ்ந்த போட்டியாளர்கள்

0
169

இந்த வார இறுதியில் நடந்த ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த எட்டு வயதான தமிழ் சிறுமியான போதானா சிவானந்தன் சிறந்த பெண் வீராங்கனையாக முடிசூட்டப்பட்டார்.

வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதானா சிவானந்தன் இறுதிச் சுற்றில் இரண்டு முறை ரோமானிய சாம்பியனான 54 வயதான கிராண்ட்மாஸ்டர் விளாடிஸ்லாவ் நெவெட்னிச்சியுடன் டிரா செய்தார். அத்துடன் சர்வதேச மாஸ்டர் மற்றும் இங்கிலாந்து மகளிர் பயிற்சியாளர் லோரின் டி’கோஸ்டாவை தோற்கடித்தார்.

இதன் மூலம் ஒரு போட்டி விளையாட்டில் கிராண்ட்மாஸ்டருக்கு எதிராக தோல்வியைத் தவிர்க்கும் இளைய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

எட்டு வயது சிறுமி “வியக்கத்தக்க முடிவை” அடைந்ததாக ஐரோப்பிய சதுரங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. போதனாவின் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போதனாவின் தந்தை சிவானந்தன் கருத்து வெளியிடுகையில், தனது மகள் தற்செயலாக சதுரங்கள் விளையாடியதாக கூறியுள்ளார்.

ஆங்கில சதுரங்க சம்மேளனத்தின் தலைவரான டொமினிக் லாசன், போதனாவின் செயல்திறன் “முற்றிலும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றார்.

இந்நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி ஹேஸ்டிங்ஸில் நடைபெறும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் போதனா கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.