வட்டுக்கோட்டை பொலிஸார் மனித உயிர்களை குடிக்க திட்டமிட்டுவதாக குற்றச்சாட்டு

0
147

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸ் உயிரிழந்த பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸார் வீதித் தடை போட்டுள்ளனர்.

இதனால் இந்த வீதித் தடையினை சம்பந்தமே இல்லாமல் போட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் குறித்த வீதித் தடையானது மனித உரிமைககளை மீறும் அளவிற்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது குறித்த வீதித் தடையில் குத்தக் கூடிய கூரான கம்பிகள் காணப்படுகின்றன. வீதியால் பயணிப்பவர்களது வாகனத்தில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டோ அல்லது வேறு விதமாகவே அந்த வீதித் தடையுடன் மோதி விபத்து சம்பவித்தால் அதில் உள்ள கூரான கம்பிகள் குத்தி உயிராபத்து ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.

குறித்த வீதித் தடைக்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதா என பொலிஸாரை வினவியவேளை அவர்கள் அதற்கு பதில் கூறவில்லை. குறித்த வீதியானது காரைநகர் கசூரினா கடற்கரைக்கு செல்லும் பிரதான வீதியாக காணப்படுகிறது. இந்த வீதியால் நாளாந்தம் சுற்றுலா பயணிகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.

இந்த வீதியால் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகுந்த இன்னலின் மத்தியிலேயே பயணத்தை மேற்கொள்கின்றனர். புதிதாக வரும் இன்னும் சிலர் குறித்த வீதியால் பயணிக்க முடியாது என கருதி திரும்பிச் செல்வதுடன் மாற்றுப் பாதையையும் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டிய பொலிஸார் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதுடன் அவர்களது அன்றாட பயணங்களிலும் இன்னல்களை ஏற்படுத்துவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்துகின்றது.

(குறிப்பு – பின்னால் உள்ள, உயரமான கறுப்பு வீதித் தடையில் குத்தக்கூடிய கூரான 6 இஞ்சிக்கும் நீளமான கம்பிகள் ஒட்டப்பட்டுள்ளன)