மோடி மற்றும் ராகுல் காந்தியின் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பாஜக – காங்கிரஸ் இடையே மோதல்

0
175

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை இராவணனாக சித்தரித்து பா.ஜ.க கட்சி பதாதை வெளியிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி அதன் டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி மிகப்பெரிய பொய்யர் என்றும், ஜூம்லா பாய் விரைவில் தேர்தல் பேரணியில் அடித்துச் செல்லப்பட இருக்கிறார் என்றும் பதாதை வெளியிட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த நாளே, பா.ஜ.க தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியை இராவணனாக சித்தரித்து பதாதையை வெளியிட்டுள்ளது.

பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், பாஜகவின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில், ராகுல் காந்தியை இராவணனாக சித்தரித்து வெளியிடப்பட்டிருக்கும் கிராஃபிக்ஸ் பதாதையின் உண்மையான நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் சக்தியால் தனது தந்தை மற்றும் பாட்டியை இழந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.