ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ள சென்றுள்ள ஜனாதிபதி ரணில் ஜோ பைடனை சந்திக்கிறார்

0
206

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது. 2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று 17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கூட்டத்தொடரில் பங்கேற்று தனது விசேட உரையை ஆற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக செப்டம்பர் இன்று நடைபெறவுள்ள. 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

மேலும் அன்று ஜனாதிபதி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன் கடல்சார் நாடுகளுக்கான ஆசிய – பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் பங்கெற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல தலைவர்களுடன் உத்தியோகப்பூர்வமற்ற சந்திப்புகளை ஜனாதிபதி நடத்த உள்ளதாக அரச தரப்பு செய்தி தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடுவார் என்றும் அறிய முடிகிறது. இதேவேளை இன்று உலக வங்கியின் தலைவரை ஜனாதிபதி சந்தித்தது கலந்துரையாடி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.