உற்சாகமாக கொண்டாடப்படும் இந்தியாவின் சுதந்திர தினம்

0
222

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று காலை 9.00 மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்து செய்தி

எம் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த உலகுக்கும் அஹிம்சையை போதித்த பாரத தேசம் சுதந்திரமடைந்து இன்றோடு 77 ஆண்டுகளாகின்றன.

சுதந்திரத்துக்கு பின்னர் பல சவால்களை சந்தித்திருந்தாலும் இந்தியா இன்று பாரிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

2030 ஆம் ஆண்டாகும்போது உலகில் மூன்றாவது பெரும் பொருளாதார சக்தியாக இந்தியா மாறக்கூடும். இதனால் இலங்கைக்கும் பல நன்மைகள் கிட்டும்.

தெற்காசியாவின் காவலனான இந்தியா, எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு கைகொடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, உதவிகளை வழங்கி, இலங்கை மீண்டெழ சுவாசம் தந்ததே இந்தியாதான் என்பதை இந்த மகத்துமான நாளில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் மேம்பாட்டுக்காக மூவாயிரம் மில்லியன்களை இந்தியா வழங்கியுள்ளது.

பல்வேறு நெறுக்கடிகளில் இருந்தும் மலையக மக்கள் சுதந்திரம்பெற இந்நிதி பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழியையும் இந்த சுதந்திர நாளில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு என்பது பூகோள அரசியல் அல்ல. மாறாக அது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான ஓர் உறவு பாலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

எம் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.