சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட ஹோர்மோன் ஊக்கமருந்து விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கமருந்து தொகை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான ஊக்கமருந்து என மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளையும் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
சட்டவிரோத மருந்துகள்
பணத்திற்கு ஆசைப்பட்டு சிலர் தரமற்ற மற்றும் சட்டவிரோத மருந்துகளை இலங்கைக்குள் கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் உடற்கட்டமைப்பு விளையாட்டுகளில் ஈடுபடும் நபர்களை இலக்கு வைத்து தசைகளை வளர்க்க பயன்படுத்தப்படும் சட்டவிரோத ஹோர்மோன் ஊக்க மருந்து விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் விற்பனையாளரால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த விடயம் கண்டுபிடிக்க்பபட்டுள்ளது.
அதற்கமைய, முகவர் ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று இந்த ஊக்கமருந்துகளை 13 வகைகளை கொள்வனவு செய்ய சம்மதித்துள்ளார். அதற்கு விற்பனையாளர் 21 லட்சம் ரூபாவை கேட்டுள்ளார்.
பெருந்தொகை ஊக்க மருந்து
இந்த மருந்தை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு அறிவித்த போதும் அவர்களிடமிருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தம்மிக்க ஜயலத்திற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள விற்பனையாளரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் மேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறு வியாபாரியின் வீட்டை சோதனையிட்டனர்.
13 வகையான 200க்கும் மேற்பட்ட ஊக்கமருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வரலாற்றில் கைது செய்யப்பட்ட பாரியளவிலான ஊக்கமருந்து தொகை இதுவாகும் என மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.