அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளீர்கப்பட்டனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (22.07.2023) தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூறுவது போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி. நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது. இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.
பூர்வீக குடிகள்
இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.
ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது. அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளீர்கப்பட்டனர்.
அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது. அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. அதில் 7 பேரை விடுதலைப்புலிகள் நியமித்தனர். ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது.
மாகாணசபை முறைமை
விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நான் உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.
அன்று 13 திருத்த சட்டத்தை ஏற்று இருந்தால் இன்று அது பேசும் பொருளாக இருந்திருக்காது. இந்த 1987 மாகாணசபை முறைமை வந்தது தொடக்கம் 2009 மே 18 வரை ஜே.ஆர் ஜெயவத்தனாவின் கையை முறுக்கி பலாத்காரமாக அந்த ஓப்பந்தத்தில் கையொழுத்து இட வைத்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இந்த நாட்டிலே எத்தனை தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.
நாங்கள் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே கருத்தை கூற வேண்டும். அந்த ஒற்றுமையின் பலவீனத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ள சந்தர்ப்பத்தை வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் இருந்து உயிரிழந்த படுகொலை செய்யப்பட்ட தோழர்களை வருடாவருடம் நினைவு கூர்ந்து உறவுகளை கௌரவிக்கும் 7வது நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், இரா. துரைரெட்ணம், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி மத்தியகுழு உறப்பினர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட கட்சி தலைவர் பத்மநாபா மற்றும் கஞவாஞ்சிகுடி, மண்டூர், காரைதீவு, கல்முனை, திருக்கோவில், அக்கரைப்பற்று, போன்ற வலயங்களில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் உருவப்பத்திற்கு முன்னால் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.