இளைஞரை கடத்த முயன்ற ராணுவ வீரர் கைது!

0
264

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து 23 வயதான இளைஞனை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்ல முயற்சித்த இராணுவ வீரர் உட்பட இரண்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட இளைஞனையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை வழியாக நேற்று முன்தினம் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு பேர் தம்மை பொலிஸ் அதிகாரிகள் எனக்கூறி போதைப் பொருள் இருக்கின்றதா என்பதை பரிசோதிக்க பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்து பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.

அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சம்பவத்தை பார்த்து உடனடியாக செயற்பட்டு முச்சக்கர வண்டியை நிறுத்தி இளைஞனை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 38 வயதான இராணுவ வீரர்,பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் எனவும் மற்றைய நபர் 28 வயதான கொழும்பு 10 சங்கராஜ மாவத்தையை சேர்ந்தவர் எனவும் புறக்கோட்டை பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் எந்த காரணத்திற்காக இளைஞனை கடத்திச் செல்ல முயற்சித்தனர் என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.