ஊழியர் சேமலாப நிதிய விவகாரம்; தனியார் துறை ஊழியர்கள் பாதிக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை!

0
176

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான ஊழியர் சேமலாப நிதியத்திலேயே (ஈ.பி.எஃப்.) பிரதானமாக இலங்கை அரசு கைவைத்துள்ளது என்றும் உள்நாட்டுக் கடனின் பெரும் பகுதியை அண்ணளவாக 93 சதவீதத்தை அதிலிருந்தே மறுசீரமைக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் நேற்றைய தினம் (28.06.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான அறிவித்தலைப் பார்த்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தானும் அதில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அதற்கு அமைவாக அவரும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பெரும் தாக்கத்தை ஏற்படும்

இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படப் போகின்றது என்பது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தே பெரும் பகுதியை – அண்ணளவாக 93 சதவீதத்தை எடுத்துக் கடனை மறுசீரமைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், வங்கிகளின் கடன்களிலிருந்து மறுசீரமைக்க முற்பட்டால் அது பெரும் தாக்கத்தை ஏற்படும்.

இதனால் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தே மறுசீரமைப்பை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதிய விவகாரம்: தனியார் துறை ஊழியர்கள் பாதிக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை! | Sri Lanka Employees Provident Fund

தனியார்துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பு

மேலும், கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள், ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கப் போவதில்லை என்று முன்னர் அரசு வழங்கிய உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டதுடன், வேறு வகையில் இதனை முன்னெடுக்க முடியுமா? என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேறு தெரிவுகள் இல்லாமையாலேயே ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்க வேண்டி ஏற்பட்டதாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், “ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைத்தால் தனியார் துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் எதிர்த்துத்தான் வாக்களிப்போம்” – என்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.